ரஜினியின் மாஸ் சீன்கள் என்று பட்டியலிட்டால் ‘பாட்ஷா’ படத்துக்குப்பிறகு ‘படையப்பா’ திரைப்படம்தான் நினைவுக்கு வரும். அத்தனை ரசிக்கக்கூடிய காட்சிகள் அந்தப்படத்தில் உண்டு. அதில் முக்கியமானது, சிவாஜி கொடுத்துவிட்டு வந்த வீட்டை, கடனுக்காக மன்சூர் அலிகானின் ஆட்கள் காலி செய்யும்போது ரஜினி வருவார். ஆனால், அவருக்கு முன்பு அவர் பெயர் எழுதிய சீட்டு வரும். அந்த சீட்டுக்கே மன்சூர் அலிகான் அடித்துப்பிடித்து ஓடுவார். ஆனால், ரஜினியையும் வரவழைத்து இரண்டு நிமிடத்தில் இரண்டு பஞ்ச் வசனங்கள் பேச வைத்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். இப்போதும் அதேபோல ஒரு நிகழ்ச்சிதான் அரங்கேறப்போகிறது. ஆனால், பஞ்ச் வசனம் பேச ரஜினி வரப்போவதில்லை.
ரஜினியை எதிர்பார்த்து சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கெல்லாம் நேற்று இரவு ஓர் அதிர்ச்சிச் செய்தி. மும்பையில் நேற்றுடன் (28.06.17) முடிவடைவதாக இருந்த ‘காலா’ படப்பிடிப்பு ஒருநாள் முன்பாகவே 27ஆம் தேதி முடிவடைந்தது. இதனால் ரஜினி எந்நேரத்திலும் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீடியா காத்திருந்தது. ஆனால், மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை ஒருநாள் முன்பே முடித்தாலும், அங்கேயே ரஜினி தங்கியிருந்த காரணம், ஹெல்த் செக்-அப்புக்காக ரஜினி அமெரிக்கா செல்வது. அமெரிக்கா என்றதும் ரஜினி ரசிகர்களுக்குப் படபடக்கலாம். ஆனால், பயப்படும்படி ஒன்றுமில்லை. முக்கியமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு டிரீட்மெண்டுக்காகச் சென்றதன் தொடர்ச்சி இதுவல்ல என்று ரஜினி தரப்பிலேயே வீண் வதந்திகளுக்கு இடமளிக்காமல் தெரிவித்து விட்டனர்.
2.0 படப்பிடிப்பைத் தொடர்ந்து காலா படப்பிடிப்பிலும் ஒருமாதம் நடித்துவிட்டதால் உடல்நிலையைப்பற்றித் தெரிந்துகொள்ள ரஜினி அமெரிக்கா செல்கிறார் என்று தெரிகிறது. முதலில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறவுள்ள 2.0 படத்தின் முதல் புரமோஷனான பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு ரஜினி செல்கிறார் என்றே தகவல்கள் பரவியது. ஆனால், இந்த ஹெல்த் செக்-அப் பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் இந்தப்பயணத்துக்கும் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர். லைகா நிறுவனத்தின் திட்டப்படி, இந்த பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றிருக்க வேண்டியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக அந்தத்திட்டம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது என்பதால் ரஜினி தரப்பு சொல்வதுதான் உண்மை.
ஷூட்டிங் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்பே முடிந்தும் மும்பையில் ரஜினி ஒருநாள் இருந்ததற்கே [அமிதாப்புடன் ரஜினி அரசியல் பேசுகிறார்](http://indiatoday.intoday.in/story/rajinikanth-politics-thalaivar-to-seek-amitabh-bachchan-advice/1/988977.html) என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். இப்போது அமெரிக்கா பயணம். ஏற்கெனவே அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து அரசியல் பேசப்போகிறார் என்ற வதந்தி வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ரஜினி என்ற பெயரை பேப்பரில் எழுதிவைத்தால்கூட ரஜினி பேப்பருடன் அரசியல் பேசுகிறார் என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டு விடுவார்கள்… உஷார்.
�,”