சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ‘மை சேலம்’ என்ற புதிய செயலியை நேற்று (நவம்பர் 06) அறிமுகம் செய்துவைத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால் சேலம் மக்களை மிகவும் கவர்ந்து வருகிறார். பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்துவது முதல் டெங்கு நோயை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் வரை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அந்தவகையில் ‘மை சேலம்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலி மூலமாகப் பொதுமக்கள் தங்கள் புகார்களைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைச் சந்திக்காமலேயே தெரிவிக்கலாம். மேலும், மாவட்டத்தில் நடைபெறகின்ற நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரோகிணி கூறும்போது, “அறிவியல் வளர்ச்சி முழுமையாகப் பெற்றிருக்கும் இந்தக் காலத்தில், மக்கள் வரிசையில் நின்று புகார் அளிப்பதால் அவர்களின் நேரம் வீணாகிறது. மேலும், பொதுமக்கள் கொடுத்த புகார்களுக்குப் பதில் கிடைத்துள்ளதா என்பதை அறிந்துகொள்ளவும் முடியவில்லை. அதைத்தீர்க்கும் விதத்தில் இந்த ‘மை சேலம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலமாகப் பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல், மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அறிந்துகொள்ள முடியும். பொதுமக்கள் தங்களின் அவசரக் கால கோரிக்கைகளைப் பதிவு செய்து அரசின் உடனடி நிவாரணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு இணையதளங்கள் குறித்த விவரங்கள் அந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதைப் பயன்படுத்தி அரசு நலத்திட்ட விவரங்களை முழுவதுமாக அறிந்துகொள்ளலாம். அனைத்து அரசுத்துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலி பொதுமக்களுக்கு மட்டுமின்றி, பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
“ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றால் ஒருநாள் ஆகிவிடும். படித்தவர்களிடம் இந்த ஆப் டவுண்லோடு செய்யச் சொல்லி எங்களுடைய புகார்களை ஓய்வாக இருக்கும் நேரத்தில் அனுப்பச் சொல்லுவோம்” எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
�,