முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு பலமுறை அவருக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. அவை குறித்து விசாரித்தால் வெறும் புரளி என்பது தெரியவரும். சில நாட்களுக்கு முன்பு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒருவர், முதல்வரைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை செய்த காவல் துறையினர் மிரட்டல் விடுத்ததாக சேலையூரைச் சேர்ந்த வினோத் குமாரை கைது செய்தனர். மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற விரக்தியில் இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று (ஜூலை 31) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “காமராசர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு உள்ளதை உள்ளபடியே பேசக்கூடிய தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகியிருக்கிறார். அவருக்குக் கட்டாயம் இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எடப்பாடியார் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என்று நேற்று முன்தினம்கூட ஒருவன் மிரட்டுகிறான்.
ஸ்டாலின் நடந்து சென்றால் யாரும் கேட்கப்போவது கூட கிடையாது. அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு உள்ளது. மக்கள் செல்வாக்குள்ள, மக்கள் தலைவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு உடனடியாக இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும். முதல்வருக்கு வலுவான பாதுகாப்பு வளையத்தை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இசட் ப்ளஸ் பாதுகாப்பு யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களுடன் சேகரித்து என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதைப் பட்டியலிட்டு, உள் துறை அமைச்சகத்துக்கு வழங்கும். அதை மத்திய அரசு பரிசீலித்து ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பை வழங்குகிறது. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பிறகு அது விலக்கிக்கொள்ளப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அப்போதே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக உளவுத் துறையின் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. ஆனாலும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தக் கோரிக்கை அமைச்சர் வாயிலாக மீண்டும் எழுந்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: காந்தியை நம்பும் ஏசிஎஸ்- சித்தரை நம்பும் துரைமுருகன் -விரக்தியில் திமுகவினர்!](https://minnambalam.com/k/2019/07/31/60)**
**[தற்கொலைக் கடிதமும் வருமான வரித் துறை விளக்கமும்!](https://minnambalam.com/k/2019/07/31/57)**
**[முதல்வரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி](https://minnambalam.com/k/2019/08/01/19)**
**[தயாரிப்பாளர்கள் Vs சேலம் சிண்டிகேட்: வலுக்கும் மோதல்!](https://minnambalam.com/k/2019/07/31/50)**
**[சித்தார்த்தா மரணத்தில் நீடிக்கும் சர்ச்சைகள்!](https://minnambalam.com/k/2019/08/01/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
�,”