எழுவர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் 2014 பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம், எழுவர் விடுதலைத் தொடர்பாக தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அனுப்பியதாகத் தகவல் வெளியானது.
இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 15), ஏழுபேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவல் தவறு. இதுதொடர்பான யூகத்தின் பேரில் சில தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. அரசியல் அமைப்பு ரீதியாகவும், சட்டதிட்டத்திற்கு உட்பட்டும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
மாநில அரசிடமிருந்து செப்டம்பர் 14ஆம் தேதி தான் வழக்கு தொடர்பான, தீர்ப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தன. எந்தத் தவறும் ஏற்படாத வகையில் இந்த ஆவணங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விவகாரத்தில் முடிவு என்பது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாக நியாயமானதாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .
�,”