பெருங்களத்தூர்(ஊரப்பாக்கம்), கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம் சானடோரியம் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியூர்களுக்குச் செல்பவர்களுக்கு தமிழக அரசு பல வசதிகளை செய்துகொடுத்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அதனால் பயன்பெறுபவர்கள் யாரும் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் சிக்கிக்கொள்கின்றனர். பெரம்பலூர் வரை செல்பவர்களுக்கே, அவர்களது நார்மலான பயணத்தைவிட இரண்டு மடங்கு நேரம் அதிகமாகிறது. அப்போது கடைக்கோடி வரை செல்பவர்களின் நிலை?
அதிக பயணிகள் பயணிக்கக் கூடிய தாம்பரம் டெர்மினல்தான் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது. அரசு அறிவிப்பின்படி, ஊரப்பாக்கத்திலுள்ள பழைய விஜிபி மைதானத்தின் உள்ளே வரை அரசுப் பேருந்துகள் சென்று நிற்க, தனியார் பேருந்துகள் வழக்கம்போலவே கிண்டி, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்டு போன்ற இடங்களில் நடுரோட்டிலேயே பஸ்ஸை நிறுத்தி ஆட்களை ஏற்றிச்செல்கின்றன.
அரசுப் பேருந்துகளில் செல்பவர்களின் நிலையும், டிராஃபிக்கில் ஊர்ந்துசெல்லும் அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களின் நிலையும் பரிதாபமாகிவிடுகிறது. தனி வாகனங்களிலும், அரசுப் பேருந்துகளில் ஏறிச்செல்பவர்களுக்கு உதவும்நோக்கில் எழுதப்பட்டிருப்பதுதான் இந்தச் செய்தி.
தாம்பரம் வழியே சென்று ஊரப்பாக்கத்தை தாண்டிச் செல்வதுதான் வெகுஜனங்களின் பொதுவான வழியாக இருக்கிறது. ஆனால் தாம்பரத்திலிருந்து கூடுவாஞ்சேரியை தாண்டிச் செல்ல, தோராயமாக 4 மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தை மிச்சப்படுத்த சில குறுக்குப் பாதைகளைப் பயன்படுத்தினால் வெகு சுலபமாக சென்னையைக் கடந்து மக்கள் பயணிக்கலாம்.
தாம்பரத்தைத் தாண்டி இரும்புலியூர் வழியாக வண்டலூரை வந்தடைய, தாம்பரம் பாலத்தின் மீது ரைட் கட் செய்து, நேராகச் சென்றால் புதிய Outer Ring Road வரும். அந்த சாலையைப் பிடித்துவிட்டால், அடுத்த 10வது நிமிடம் பாம்புபோல் பல கிலோமீட்டருக்கு நீண்டு கிடக்கும். டிராஃபிக்கின் தலைப்பகுதியிலேயே இறங்கலாம். அப்படியும் வேண்டாம்… ஸ்ட்ரைட்டா கூடுவாஞ்சேரிதான் என்றால், Outer Ring Roadஇல் வந்து வண்டலூர் பாலத்திலிருந்து ரைட் எடுத்து, இரண்டாவது லெஃப்ட் திரும்பினால் நேராக ஒரே ரோடுதான். கூடுவாஞ்சேரியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் உதவியால் கூடுவாஞ்சேரியை சென்றடையலாம். அப்படி இல்லாமல் பெருங்களத்தூர் அல்லது ஊரப்பாக்கத்தில் யாரையாவது டிராப் செய்துவிட்டு திரும்புவதென்றால். வண்டலூர் – கேளம்பாக்கம் ரோட்டைப் பிடித்து நேராக OMR அல்லது ECR சென்றுவிடலாம். இந்த வழியும் வேலைக்கு ஆகாது என்று யோசித்தால், தாம்பரம் பஸ் ஸ்டாண்டு தாண்டியதும் இருக்கும் சப்-வே வழியே புகுந்து மேலே ஏறியதும் ரைட் எடுத்து சென்றால், பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிலையத்தை சுலபமாக அடையலாம். (குறிப்பு: இந்த வழி, கார்களுக்கும் பைக்குகளுக்கும் மட்டுமானது)
சென்னையின் கடைசி டிராஃபிக்கைப் பற்றி பார்த்துவிட்டதால், அதன் முதல் பிரச்னையை பார்ப்போம். கோயம்பேடு, தினமும் கோடிக்கணக்கானவர்கள் டிராவல் செய்யும் வழி. இந்த டிராஃபிக்கை மீறி வந்தாலும், தாம்பரம் செல்லும் பேருந்துகள் பாதிக்கப்படலாம். ஆனால் பூந்தமல்லி வழியாக வேலூர் போன்ற மாவட்டங்களுக்குச் செல்பவர்களின் நிலைதான் பரிதாபம். ஒரு மணி நேரத்துக்காக மட்டும் கிட்டத்தட்ட 4 மணி நேரத்தை செலவு செய்யவேண்டுமா? வேண்டாம்.
வடபழனி தாண்டியதும், MMDA காலனி வழியாக அரும்பாக்கத்தை அடைந்து சில நிமிட டிராஃபிக்கை தாண்டினால், பூந்தமல்லி ஹைரோடு வழியாகச் சென்றுவிடலாம். அதேபோல, தென்கிழக்கு மாவட்டங்களான பாண்டிச்சேரி, காரைக்கால், கடலூர் ஆகியவற்றுக்கு திருவான்மியூரில் பஸ் ஸ்டாண்டு வைத்திருக்கிறார்கள். அந்த டிராஃபிக்கை கடந்துசெல்ல, அடையாறு கஸ்தூரிபாய் நகர் வழியாக (S2 தியாகராஜா தியேட்டர் வழியாக) ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சென்னையைவிட்டு சென்றுவிடலாம்.
அடுத்த பஸ் ஸ்டாண்டு காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களுக்குச் செல்ல பேருந்து நிற்கும் இடம் தாம்பரம் சானடோரியம். இரண்டு நாட்களாக தாம்பரம் மெப்ஸ் சாலைகளில் நிற்கவைக்கப்பட்டிருந்த பேருந்துகளால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய டிராஃபிக்கை சந்தித்திருக்கிறார்கள். கும்பகோணம் வரை சென்ற ஷ்யாம் சொன்னதன்படி, மக்கள் முன்பைவிட இப்போதுதான் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிகளும், கார் மற்றும் பைக் ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டவை.
– சிவா�,