புதிய படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் ‘தமிழ் கன்’ இணையதள நிர்வாகிகளுள் ஒருவரான கௌரி சங்கர் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின்பேரில் இவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் தமிழ் கன், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்குத் திரைத்துறையை சார்ந்த சிலரும் உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு **இங்கே இணையம் வழியே புதிய படங்களை வெளியிடுவது சாதாரணமான குற்றமாக (சாஃப்ட் கிரைம்) பார்க்கப்படுகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான படம் திருடப்படுவது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை. மக்களும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதில் ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்களின் வலி இருப்பதைப் பலரும் உணர்வதில்லை”** என்று கூறியுள்ளார்.
மேலும் **கௌரி சங்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பின்னால் செயல்பட்டு வருபவர்களும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள். தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தை சேர்ந்தவர்கள் எங்கிருந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம். தற்போது கௌரி சங்கர் சரியான ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டதைப் போன்று அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள். அதற்குச் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறோம்** என்று தெரிவித்துள்ளார்.
**”சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு சினிமா தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் சில ஊழியர்களும் இதற்கு துணையாக இருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அது வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. தற்போது ஆன்லைன், கேபிள், பேருந்துகளில் புதிய படங்களை வெளியிடுவதையும், ஒளிபரப்புவதையும் நிறுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். அடுத்தகட்ட முயற்சியாக புதிய படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடத் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்யும் திரைத்துறை சார்ந்தவர்களை கண்டுபிடித்து, அவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக் கப்படுவார்கள்”** என்று எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.�,”