குழந்தை அழகாகப் பிறக்க வேண்டும் என்று கிலோ கிலோவாகக் குங்குமப்பூவைச் சாப்பிடுவதிலிருந்து க்ரீம்களை வாரி இறைத்து பூசி விடுவதுவரை எக்கச்சக்கப் புத்திசாலித்தனங்களைக் கையாளுகின்றனர் பலர்.
இன்னும் சிலர் குழந்தைகளுக்கு அதீத அழகு வேண்டும், அதனால் அதிக முறை குளிக்கவைத்தால் கறுத்துப் போகாது என்று என் தோழி ஒருத்தி தன் குழந்தையை அடிக்கடி குளிப்பாட்டி, அதை பெருமையாகவும் சொல்லிக்கொண்டாள். சற்று பகீர் என்றே இருந்தது. அப்படி என்ன அழகின் மீதும் நிறத்தின் மீதும் ஒரு பற்று, வெறி. எல்லாமும் அழகுதானே. என் நண்பர் கோபாலகிருஷ்ணன் என்ற மருத்துவர் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது பற்றி சொல்லியிருந்தார். அதுபற்றியும் என் தோழியிடம் பகிர்ந்தேன்.
அடிக்கடி குழந்தைகளைக் குளிப்பாட்டுவதால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோபயாட்டிக்ஸ் (Probiotics) எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்து உயிரிழக்க ஆரம்பிக்கும். மேலும், ப்ரோபயாடிக்ஸ் பாக்டீரியாக்கள் சீராகவும் ஆரோக்கியமாகவும் இயங்க உதவும் ப்ரீபயாடிக்ஸ் (Prebiotics) எனப்படும் ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், மினரல்களையும் இழக்க ஆரம்பிப்பார்கள்.
தேவைக்கும் அதிகமான சுகாதாரப் பேணலால் குழந்தைகளின் உடலுக்கு நன்மை செய்யும் விஷயங்கள் அழிந்துபோகப் பெற்றோர்களே காரணமாகிறார்கள். இதன் விளைவாக, கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடலில் உயிர்வாழ வழிவகை ஏற்படுத்தப்படும். அவர்களின் சுய நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இதுதான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’. இதன் விளைவாக எளிதில் வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே வறட்சியான தோலோடுதான் பிறக்கின்றன. பிறந்த சில நாள்களில் அவை அப்படியே உரிந்து, மறைந்து விடும். எதற்கும் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்து கொடுப்பது நல்லது.
குளிப்பாட்டியப் பிறகு குழந்தையைத் துடைக்க சுத்தமான டவலை வைத்து உடனே துடைக்க வேண்டும். மேலும், குழந்தையைக் குளிப்பாட்டி, துடைத்தப் பின் மிகவும் நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தையைக் குளிரில் இருந்து தடுக்கலாம்.�,