திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு கடந்த தேர்தலைப் போல்தான் இருக்கும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனும் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக இருந்தவருமான மு.க.அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக நீக்கிவைக்கப்பட்டார். கலைஞர் காலமானதற்குப் பிறகு திமுகவில் சேர கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட அழகிரி, கலைஞர் நினைவிடத்தை நோக்கி பேரணியும் நடத்தினார். ஆனால் கடைசிவரை திமுகவில் அவர் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இதனால் திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கலைஞர் பெயரில் அமைப்பு தொடங்குவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்த எந்த நடவடிக்கைகளிலும் அழகிரி இதுவரை ஈடுபடவில்லை.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 26) செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், மக்களவைத் தேர்தலில் உங்களின் ஆதரவு யாருக்கு என்றும் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அழகிரி, “இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் எனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பேன். திமுக -காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கடந்த தேர்தல் போல் இந்த தேர்தலிலும் இருக்கும்” என்று தெரிவித்தார்.�,