கடலில் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியை மையம் கொண்டு ஏற்பட்ட ஓக்கி புயலால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும் காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குமரி மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு இன்று ( டிசம்பர் 2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புயல் பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்துக் கேட்டறிந்தார். அவரிடம் புயலால் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து செயல்பட்டு, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் பெரும்பாலானோர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சரிடம் முதல்வர் தெரிவித்துள்ளார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
கடலுக்குச் சென்று இதுவரை திரும்பாத மீனவர்களை விரைவில் மீட்பதற்கான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசின் கடலோர காவல் படை, கடற்படையின் உதவிகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் எனவும், மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படை, கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். மீனவர்களைத் தேடும் பணியில், தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.�,”