�ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எல்லை தாண்டி இந்தியாவுக்கு வந்ததால் கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரர் ஒருவர் தற்போது தாயகம் திரும்பவுள்ளார்.
கடந்த 1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போர் நடந்துகொண்டிருந்தபோது வாங் கீ (77) என்ற சீன ராணுவ வீரர், தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார். இதனால் இந்திய வீரர்கள் அவரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அசாம், ஆஜ்மீர், டெல்லி, பஞ்சாப் என பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட வாங், கடந்த 1969ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசம் பாலகாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நல்லெண்ண அடிப்படையில், மத்திய அரசு அவரை விடுவித்தது.
இதன்பின்னும் சீனா செல்ல அனுமதி கிடைக்காததால் அவர் போபால் நகரில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அப்பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். பின், அதே பகுதியைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு என்ற மகனும் உள்ளார்.
இந்நிலையில், தற்போது வாங்கிற்கு தனது தாய்நாடான சீனாவுக்குச் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. வாங், தனது குடும்பத்துடன் சீனா செல்ல மத்திய வெளியுறவு அமைச்சகம் விசா வழங்கியுள்ளது. இதனால் இன்று அவர்கள் மூவரும் சீனா செல்லவுள்ளனர்.�,