ஆம்புலன்ஸ் டிரைவரின் முயற்சியாலும் மற்றும் காவல் துறையின் ஒத்துழைப்பு காரணமாகவும் ஒன்பது மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்ட பயணம் அரை மணி நேரம் முன்னதாகவே திருவனந்தபுரம் – வேலூருக்கு மின்னல் வேகத்தில் வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனையைச் சென்றடைந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டரை வயது சிறுமி புற்றுநோய் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டது.
வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அந்தச் சிறுமியை அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் ஒன்பது மணி நேரத்துக்குள் அந்தச் சிறுமியை அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கேரளக் காவல் துறை மற்றும் தமிழகக் காவல் துறை இணைந்து சிறுமியை அழைத்துக்கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி திருவனந்தபுரம் – வேலூர் பயணப்பாதையில் உள்ள ரோந்து காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் ஆகியோருக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (நவம்பர் 28) இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் இருந்து சிறுமியுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.
குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு 8.30 மணிக்கு வந்த அந்த ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் 9.15 மணிக்கு நாகர்கோவிலைக் கடந்து நெல்லையை நோக்கிச் சென்றது. மதுரை வழியாகப் பயணத்தை தொடர்ந்த அந்த ஆம்புலன்ஸ் நேற்று (நவம்பர் 27) அதிகாலை 4.10 மணிக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையைச் சென்றடைந்தது. இதையடுத்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
ஒன்பது மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்ட பயணம் ஆம்புலன்ஸ் டிரைவரின் முயற்சியாலும் மற்றும் காவல் துறையின் ஒத்துழைப்பு காரணமாகவும் அரை மணி நேரம் முன்னதாகவே சி.எம்.சி. மருத்துவமனையைச் சென்றடைந்தது.
கேரளக் காவல் துறை மற்றும் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் சவான், காவல் துறை கண்காணிப்பாளர் துரை ஆகியோர் போக்குவரத்துக் காவலர்களுக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்கி நேரடி கண்காணிப்பு மூலம் கேரள சிறுமியின் உயிரைக் காக்க உதவினர். இவர்களின் உதவிக்குச் சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
நோயாளிகளின் உயிரைக் காக்கும் மருத்துவம் தற்போது மிகவும் நவீனமாகி விட்டது. அதேபோல நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் சேவையும் தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளது.
மேலும் நோயாளிகளுக்குக் குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும்போது அனைவரும் மனிதாபிமானத்துடன் ஒன்று இணைந்து செயல்படும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது.�,