மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலின் போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தொடர் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நடை பாலத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் நசுங்கி உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த நெரிசலின் போது, ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். அப்போது அதில் சிக்கிய பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் மனிதாபிமானம் இல்லாமல் இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போராடி கடைசியில் இறந்து போனார்.
விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்த ஜெயஸ்ரீ கனாடே ,“நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்களிடமிருந்து பணம், நகைகள், பைகள் ஆகியவற்றை சிலர் திருடி சென்றனர். ஆனால், இந்த பாலியல் தொந்தரவு வீடியோவை நினைத்தால் வெட்கக் கேடாக உள்ளது. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் எப்படி இதுபோல் நடந்துகொள்ள முடிந்தது? குற்றவாளியை கடுமையாகத் தண்டிக்க
வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அந்த பகுதியைச் சேர்ந்த சந்தேஷ் பஹதூர், “பாலியல் தொந்தரவு வீடியோ உண்மையில் வெட்கக் கேடானது. பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவனைத் தண்டிக்க வேண்டும். பெண்கள் உதவிக்காகக் கதறினர் நாங்கள் உதவி செய்ய ஓடினோம். ஆனால் மேம்பாலத்தில் இருந்த நெரிசலினால் எங்களால் பலரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தசரா என்பதால் பெரும்பாலான பெண்கள் புடவை கட்டியிருந்தனர். உடல்களின் குவியலிலிருந்து அவர்களை மீட்கும் போது அவர்களின் புடவைகள் கிழிந்தன என பண்டுப் குடியிருப்பாளர் அஞ்சலி தெரிவித்துள்ளார்.�,