நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை, பெண் டிஐஜி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிடத் தடை விதித்துள்ளது.
இன்று (நவம்பர் 20) நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்மை வெளியாக வேண்டுமென்றால் அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும், அறிக்கையை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும், தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பில் வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதன் அடிப்படையில் சாட்சி விசாரணை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால், விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டுமென்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “உள் விசாரணையை எப்படி நிறுத்த முடியும்? குற்றச்சாட்டு குறித்து உண்மையைக் கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா?” என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
மாணவிகளின் பெயர்களை வெளியிட்ட பத்திரிகைகள், ஊடகங்களுக்கு எதிராக மனுதாரர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது பற்றியும், அவர் சார்ந்துள்ள அமைப்பின் பதிவு மற்றும் நிர்வாகிகள் பற்றிய விவரங்களைக் கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணையை, வரும் நவம்பர் 26ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.�,