சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, 2017 மார்ச் மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனை காலம் முடியவுள்ள நிலையில், விரைவில் அவர் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா வருகையை முன்வைத்து அரசியலில் என்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்துள்ளன.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்,இன்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவால் பதவி பெற்றவர்கள். அவர் விடுதலையாகும்போது கட்சியில் மிகப்பெரிய அதிர்வலைகள் ஏற்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பிரேமலதா விஜயகாந்த் வரலாறு தெரியாமல் எந்த அடிப்படையில் பேசினார் என்பது தெரியவில்லை. தனது கட்சி விவகாரம் குறித்து மட்டும் அவர் பேசினால் நல்லது. நான் உட்பட எங்கள் அனைவரையும் அமைச்சர்கள் ஆக்கியது ஜெயலலிதாதான். இதில் சசிகலாவின் பரிந்துரை எங்கும் இல்லை” என்று தெரிவித்தார்.
முதல்வரையே நியமித்தது சசிகலாதான் எனவும் கூறியுள்ளாரே எனக் கேட்க, “எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டுதான் முதல்வரைப் பதவிக்கு கொண்டு வந்தோம். வேறு யாரும் கையெழுத்திட்டு அவரை முதல்வராக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, “தேர்தலின்போது யார் கூட்டணி பேசுவார், கூட்டணி எவ்வாறு இறுதியாகி ஜெயலலிதாவிடம் செல்லும் என்பதெல்லாம் தெரிந்துதான் பிரேமலதா உண்மையைப் பேசியிருக்கிறார்” என்று கூறினார்.
ஜெயலலிதா மறைந்த அன்று சசிகலா அழைத்து ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவையை அமைக்கச் சொன்னதாகத் தெரிவித்த சரஸ்வதி, “அப்போது, நீங்கள் அறிவுறுத்தி நான் அமைச்சராக வேண்டாம் என்று ஜெயக்குமார் கூறியிருக்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் உட்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து தான் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தனர். சசிகலா வெளியில் வந்தவுடன் அதிமுக சசிகலாவைத் தேடி வரும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
**எழில்**
�,