தமிழகம் கமலா ஹாரிஸின் வருகைக்காக காத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக 284 எலக்டரல்களைப் பெற்ற ஜோ பிடென் தேர்ந்தெடுக்கப்பர்ட்டுள்ளார். அவர் வெற்றிபெற்றதன் மூலம், தாய் வழியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாக வரலாறு படைத்துள்ளார்.உ
கமலா ஹாரிஸ் துணை அதிபரானது தமிழகத்திற்கு பெருமையளிக்கக் கூடியது எனத் தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர் தமிழகத் தலைவர்கள். கமலா ஹாரிசின் வெற்றி அவரது தாத்தாவின் ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கமலா ஹாரிஸின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அவருக்கு அனுப்பி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அதில், “அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பக்து, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி. எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்.
ஆண்களுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்கான திட்டங்களைத் தீட்டிய இயக்கம். அத்தகைய இயக்கத்துக்கு, உங்களது வெற்றி, மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
ஒரு தமிழ்ப் பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருப்பதாகவும், உங்களது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர் தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும் எனவும், தங்களது வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், “உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும், எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்” என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார் ஸ்டாலின்.
**எழில்**
�,”