தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடை, நினைவுப் பரிசை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சசிகலா. அதேசமயத்தில் விரைவில் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அரசியல் வட்டத்தில், குறிப்பாக அதிமுகவினரிடையே சசிகலா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக கட்சி கொடி பொறுத்தப்பட்ட காரில் பயணிப்பது, அதிமுக பொதுச் செயலாளர் என கூறிக்கொள்வது, அதிருப்தி அதிமுக நிர்வாகிகளுடன் பேசுவது என சசிகலாவின் செயல்கள் அதிமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சசிகலா… அதில்,
“அதிமுக என்ற பேரியக்கம் எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம்பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழிவந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.
என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு ஏதேனும் எனக்குச் செய்ய விரும்பினால், நீங்கள் வாழும் இடத்துக்கு அருகே உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்.
உங்களை எல்லாம் நீங்கள் வாழும் இடத்துக்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,