அதிமுக கூட்டணியில் பிப்ரவரி 27 ஆம் தேதியே பாமகவுடனான தொகுதி உடன்பாடு எட்டப்பட்டபோதும், அதன் பிறகு முக்கிய கட்சிகளுடனான உடன்பாடு இன்னும் கையெழுத்தாகவில்லை.
குறிப்பாக 28 ஆம் தேதி இரவு அமித் ஷா சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இரவு 1மணிவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதில், “ டிடிவி தினகரன், ‘எங்கள் பொது எதிரி திமுகதான். திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டோம்’ என்றுதானே தொடர்ந்து பேசி வருகிறார்”என்பது பற்றி கேட்டதாக முந்தைய செய்தியில் நாம் பதிவிட்டிருந்தோம்.
அமித்ஷாவுக்கு கிடைத்த தகவல்களின்படி டிடிவி தினகரனின் அமமுக வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை குறிவைத்தால் அது அதிமுக கூட்டணிக்குத்தான் பாதிப்பாக அமையும். அதை அடிப்படையாக வைத்து அவர் இபிஎஸ், ஓபிஎஸ் சிடம், “எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஆய்வு செய்து சில தொகுதிகளைக் கூட நாங்கள் குறைத்துக் கொள்கிறோம். கூட்டணியின் வெற்றி முக்கியம் என்பதால், இதற்கு நாங்கள் முன் வந்துள்ளோம். டிடிவி தினகரனின் அமமுக நமது கூட்டணியில் இருக்க வேண்டும். இருந்தால் நமக்கு நல்லது. நீங்கள் நேரடியாக சீட் கொடுக்க முடியாது என்றால் பாஜகவிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் அமமுகவோடு தனியாக தொகுதிப் பங்கீடு செய்துகொள்கிறோம்”என்று கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. “கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம்” என்று அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். விரைவில் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார் அமித் ஷா.
ஜனவரி 19 ஆம் தேதியே, “சசிகலா, தினகரன் அதிமுகவில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை”என்று டெல்லியில் கூறியிருந்தார். ஆனால் அதன் பின் இப்போது வரை சசிகலா பற்றி பொதுவெளியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் கருத்தே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
**-ஆரா**�,