தேமுதிக தலைவர் விஜயகாந்த் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.
சாலிகிராமம் காவிரி உயர்நிலைப்பள்ளியில் வாக்கு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், கூட்டமுள்ள பகுதிகளுக்குப் போக வேண்டாம் என்ற மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறை. இதனால் ஓட்டு பிரிவதற்கு வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் ஆட்சி, அதிகாரம், பண பலம் இல்லாமல், ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்தால் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த தேர்தலின் போது ஓட்டுக்குக் காசு, கொலுசு, மூக்குத்தி கொடுத்ததைக் காண முடிந்தது. அதுவும் காவல்துறை உதவியுடன் பரிசுகளைக் கொடுத்தனர். அனைத்து இடத்திலும் மக்களிடம் வெறுப்பு இருந்ததைக் காண முடிந்தது.
மக்களுக்கு இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லை. ஓட்டுக்கு காசு கொடுத்து எல்லோரும் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தில்தான் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை” என்றார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக உள்ள நிலையில் பிரேமலதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
**-பிரியா**