நடிகர் கமல்ஹாசனை விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கிய முதல்வர், அதன்பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சமீபத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதுதொடர்பாக பேசிய முதல்வர், “நடிப்பிலிருந்து ரிட்டையர் ஆன பிறகு தற்போது கட்சி துவங்கியுள்ளார் கமல்ஹாசன். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறவர்கள் எல்லாம் அரசியல் செய்தால் என்ன ஆகும். பிக்பாஸ் பார்த்தால் ஊரிலிருக்கும் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது. கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மையெல்லாம் செய்யவில்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவரின் வேலை. பிக்பாஸை பார்த்தால் குழந்தைகள் கெட்டுப்போய்விடும்” என்று சாடினார்.
மேலும், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நாட்டு மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். எம்.ஜி.ஆர் தனது படங்களில், பாடல்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் படங்கள் ஏதாவது எடுத்துள்ளாரா? அவருடைய படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி. ஆகவே, அவருடைய கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என கமல்ஹாசனை விமர்சித்துள்ளார் முதல்வர்.
*எழில்*�,