சமரச தூதர்கள் தம்பிதுரை, செங்கோட்டையன்

politics

திமுகவின் பொதுக்குழு கூட்டம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றிய எந்த தீர்மானமும் கொண்டுவரப் படக் கூடாது என்று அறிவித்தார் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்.
ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியோ  இதுபற்றி பொதுவெளியில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதோடு…  தன்னை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உயர்த்திக் கொள்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடிக்குதான் அதிக எண்ணிக்கையில் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் தரப்பினரோ,   “ஒருங்கிணைப்பாளரையும், இணை ஒருங்கிணைப்பாளாரையும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கவில்லை. அடிப்படை உறுப்பினர்கள்தான் ஒருமனதாக தேர்ந்தெடுத்தார்கள். எனவே எடப்பாடிக்கு அதிக மாவட்டச் செயலாளர்கள் இருப்பதால் அவர் அதிக அதிகாரம் பெற்றவராக மாற முடியாது. இதுபோல மாசெக்கள்  மூலம் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். அன்றே அதிமுகவின் சட்ட விதிகளில்  தலைமை என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று  கொண்டுவந்தார். எனவே மாவட்டச் செயலாளர்களால் எதுவும் செய்ய முடியாது” என்கிறார்கள்.

மேலும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றிய தீர்மானத்தைக் கொண்டுவந்தால்  அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்படும் என்று சட்டவிதிகளை மேற்கோள் காட்டி பன்னீர் தரப்பில் தயாரிக்கப்பட்ட கடிதம் இன்று அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் மௌனமாகவே இருக்கிறார். இன்று அவரை சந்தித்து பலரும் பேசினார்கள். அனைவரிடமும்,  ‘பொதுக்குழு நடக்கும்.. மத்ததெல்லாம் பேசிக்கிட்டிருக்கோம்’ என்றே சொல்லியுள்ளார். சேலத்தில் நேற்று முன் தினம் எடப்பாடியை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை நேற்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார். அதேபோல இன்று மூத்த தலைவரான செங்கோட்டையன்  எடப்பாடியையும், பன்னீர்செல்வத்தையும் மாறி மாறி சந்தித்திருக்கிறார்.இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம்  கே.பி. முனுசாமி,  வேலுமணி, தங்கமணி போன்றோர்தான்  எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தூதுவர்களாக செயல்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மூலம் பன்னீரை அணுகாமல் தம்பிதுரையையும், செங்கோட்டையனையும்  இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியிருக்கிறார்.
பொதுக்குழு கூட வேண்டும், அமைதியாக கூட வேண்டும் என்ற நோக்கத்தில் தம்பிதுரையும், செங்கோட்டையனும்  எடப்பாடி-பன்னீர் இருவரிடமும் தனித்தனியாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
-**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *