தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வரும் ஆர்த்தி ஸ்கேன் செண்டரில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் செண்டர்கள் உள்ளன. பெட் சிடி, எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனை எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், டெக்சா ஸ்கேன் உள்ளிட்ட பல வகையான ஸ்கேன்கள் எடுக்கப்படுகின்றன.
2000ம் ஆண்டு திருநெல்வேலியைச் சேர்ந்த கோவிந்தராஜன் இந்த ஸ்கேன் நிறுவனத்தை தொடங்கினார். சென்னையில், வடபழனி, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தமிழகத்தில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் செண்டர்களில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டில் அவரது மனைவி மருத்துவர் கோமதியிடம் வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிமாநிலங்களிலும் சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**