மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று (மே 28) திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ‘கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாப்படும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை வைக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் கலைஞரின் சிலையை வடிவமைத்தார்.
இந்நிலையில் இன்று (மே 28) மாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரின் வருகைக்காக காத்திருந்தனர்.
குடியரசுத் தலைவர் வந்ததும், அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கைகொடுத்து வரவேற்றார். பின்னர் அவரை அனைவரும் விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கலைஞரின் சிலையை வெங்கையா நாயுடு ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கலைஞர் சிலை முன்பு முதல்வர், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
**-பிரியா**