நித்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கைலாசாவின் புது அப்டேட்!

politics

சர்ச்சைக்குப் பெயர் போனவர் நித்தியானந்தா. பிடதி ஆசிரமத்திலிருந்த போது பெண் சீடர்களை, கட்டாயப்படுத்தித் தங்க வைத்தல், பாலியல் பலாத்காரம் என பல வழக்குகளில் சிக்கி தலைமறைவானார். குஜராத் ஆசிரமத்திலிருந்த சிறுமிகளைக் கடத்தி வைத்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீசாகிய இன்டர்போல் நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் அனுப்பி 2 ஆண்டுகள் ஆகியும் போலி சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியவரவில்லை.

இந்தியாவிலிருந்து தலைமறைவான நித்தியானந்தா கைலாசா எனும் தீவு நாட்டை உருவாக்கி அதற்கு நாணயம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் சமீப நாட்களாக, கைலாசா என்ற நாடு என எதுவுமில்லை, நேபாள் அருகே இமயமலை அடிவாரத்தில் நித்தியானந்தா தங்கியிருக்கிறார், கப்பல் ஒன்றில் சில சீடர்களுடன் தங்கியிருக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின.

தலைமறைவாக இருந்தாலும் நித்தியானந்தா வீடியோ வெளியிடத் தவறியதில்லை. க்ரீன் ஸ்க்ரீன் மூலம் பல்வேறு ஐபி முகவரியிலிருந்து வெளியிட்டு வந்தார். இந்தச்சூழலில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக நித்தியானந்தாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது தான் பேசுபொருளாக உள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரே, “தனக்கு உடல் நிலை சரியில்லை, உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை, வாய் வழியால் எந்த உணவையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் இறந்துவிட்டதாகச் சிலர் புரளிகளைக் கிளப்புகின்றனர். நான் தற்போது சமாதி மன நிலையில் இருக்கிறேன். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். நான் சொல்வதெல்லாம் உண்மை” என கைலாசத்தின் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இதையும் அவரது சீடர்கள் பதிவிட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. அதுபோன்று மே 23ஆம் தேதி சமாதியின் உள்ளே இருந்து நேரடி ‘கவரேஜ்’ எனக் குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா.

இந்தசூழலில் மானத்யா ஆத்மபிரியா என்ற நித்தியானந்தா சிஷ்யை ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நித்தியானந்தாவின் உடல்நலம் பற்றி போலியான பொய்யான செய்திகளை இந்து விரோதிகள் பரப்பி வருகின்றனர்.

பரமசிவனே நேரடியாகத் திருமேனி தாங்கி வந்து நித்தியானந்தாவாகத் திருப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். செய்து முடித்தே தீருவார். அவரிடம் நேரடியாகத் தீட்சைப் பெற்ற நானும், என் சக சீடர்களும் சேர்ந்து இந்த கைலாசத்தைப் புனரமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம், உறுதுணையாக இருப்போம். இதில் மாற்றுக் கருத்தில்லை.

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், விட்டுவிட்டு ஓடிப்போக நாங்கள் ஒன்றும் பாவாடை சன்னியாசிகள் அல்ல. பரமசிவத்திடமிருந்து நேரடியாகவே தீட்சை பெற்ற சன்னியாசிகள். அதனால் இந்த கைலாசத்தை யாராலும் அழிக்கவும் முடியாது புனரமைப்பை நிறுத்தவும் முடியாது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத அவருடைய சீடர்கள் சிலர் கூறுகையில், “நித்தியானந்தாவுக்கு ஏற்கனவே சுகர் இருக்கிறது. தற்போது, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் என பல உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். கடந்த ஒரு வாரமாக அவரை சிகிச்சைக்காக இந்தியா அழைத்து வந்து, நீதிமன்றத்தில் சரணடையச் செய்து, பின் மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் பெற அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்” என்கின்றனர்

இவ்வாறு நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என பல தகவல்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று (மே 28) காலை கைலாசா ட்விட்டர் பக்கத்தில் நித்யானந்தா வெளியிட்டது போல் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

அதில், “அலோபதி அறிவியலின் படி மருத்துவ ரீதியாக எல்லாம் சரியாக இருந்தாலும், நித்ய சிவ பூஜை, பத்மாசனத்தில் அமர்ந்து இரவும் பகலும் சமாதியில் இருப்பது ஆகியவற்றைத் தவிர வேறு எந்தச் செயலையும் எனது உடல் செய்வதில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

“பல வெறுப்பாளர்கள் மற்றும் எதிரிகள் இந்தப் பதிவு என்னாலேயே (நித்யானந்தா) நேரடியாகப் போடப்பட்டதா அல்லது வேறு யார் மூலமாவது போடப்பட்டதா என்ற சந்தேகத்தை உருவாக்க முயல்வார்கள். அனைத்து சந்தேகங்களையும் கேள்விகளையும் தெளிவுபடுத்த, எனது இன்றைய கையொப்பத்துடன் ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளேன்” என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் நேற்றைய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நித்தியின் முழு உருவத்துடன் கூடிய புகைப்படத்தை வெளியிடாமல், வெறும் கை மட்டும் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது, இது அவருடைய கையொப்பம்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

**-பிரியா**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *