வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் இன்று (மே 19) அதிகரித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த மே 7 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால் சென்னை சிலிண்டர் விலை 1000 ரூபாயைக் கடந்தது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. ரூ.3 உயர்ந்து ரூ.1,018.50க்கு விற்பனையாகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, மார்ச் 22ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. அப்போது ரூ.965.50க்கு சிலிண்டர் விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஆனால் இந்த மாதம் இரு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மே 5ஆம் தேதி 50 ரூபாயும் தற்போது ரூ.3ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் தற்போது வரை 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.103 அதிகரிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மே 7ஆம் தேதி ரூ.102.50 அதிகரித்து ரூ.2,499க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**