Sபட்ஜெட்: டாப் துறைகள் என்னென்ன?

politics

தமிழக நிதி அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று மார்ச் 18ஆம் தேதி சட்டமன்றத்தில் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கினார்.

சுமார் ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார்.

பட்ஜெட்டில் அரசு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பதை பொறுத்தே அந்தந்தத் துறைகளின் மீது அரசின் கவனிப்பும் அக்கறையும் வெளிப்படும். அதுமட்டுமல்ல எந்தெந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ அது அந்தத் துறையின் மீதான அக்கறை மட்டுமல்ல அந்தத் துறை அமைச்சரின் மீதான அக்கறையாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மிக அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற துறைகள் எவை எவை என்று கவனித்தபோது…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பு வகிக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 895. 89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையின் மீது முதல்வருக்கு இருக்கும் அக்கறை வெளிப் படுகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

அடுத்ததாக அமைச்சர் பெரியகருப்பன் பொறுப்பு வகிக்கும் ஊரக வளர்ச்சித் துறைக்கு 26 ஆயிரத்து 647.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் புறங்களின் மீதும் கிராமப்புற மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் இந்த பட்ஜெட் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருப்பது இதிலிருந்து தெரிகிறது.

திமுக அரசின் இந்த பட்ஜெட்டில் இன்னொரு அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற துறை நகராட்சி நிர்வாகம். அமைச்சர் கே. என். நேரு பொறுப்பு வகிக்கும் இந்த துறைக்கு 20 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதற்காக 19,000 கோடி ரூபாயை அரசு ஊழியர்களுக்காக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறார் முதலமைச்சர். இந்தத் துறையை நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தன் வசம் வைத்திருக்கிறார்.

தமிழக சாலைகள் மேம்பாட்டிற்காக அமைச்சர் எ.வ. வேலு பொறுப்பு வகிக்கும்
நெடுஞ்சாலைத் துறைக்கு 18 ஆயிரத்து 218.91 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டிருக்கிறது.

கல்வி, உட்கட்டமைப்பு, சாலைகள் ஆகியவற்றை தொடர்ந்து சுகாதாரத்துறையில் முதல்வரின் கண் பதிந்திருக்கிறது. இந்த வகையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொறுப்பு வகிக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17 ஆயிரத்து 901 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகரம், கிராமம் என இரு பகுதிகளையும் கொண்டிருக்கும் கூட்டுறவு துறைக்கு இந்த பட்ஜெட்டில் 13 ஆயிரத்து 176.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையை நிர்வகிப்பவர் மூத்த அமைச்சரான ஐ. பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் கட்டமைப்பு மற்றும் காவல்துறையினரின் மேம்பாட்டுக்காக இந்த பட்ஜெட்டில் 10 ஆயிரத்து 285. 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறையை தன்வசம் வைத்திருப்பவர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆவார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அடுத்ததாக கிராமப்புற மக்கள், நகரமய மேம்பாடு, அரசு ஊழியர் நலன், சாலை வசதி, சுகாதாரம், பெண்கள் மேம்பாட்டை உள்ளடக்கிய கூட்டுறவு துறை, காவல்துறையினரின் நலம் என இந்த அரசின் முன்னுரிமை வெளிப்பட்டுள்ளது.

இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் நாளை மார்ச் 19 தாக்கல் செய்யப்படுகிறது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

**ஆரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *