புதுச்சேரியில் நடைபெற்ற அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 24ஆம் தேதி கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் பேசிய அமித் ஷா, “இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அரவிந்தர் பெரும் பங்களிப்பைச் செய்தார், அவருடைய படைப்புகள் மற்றும் எண்ணங்கள் அனைவருக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. மேலும், நமக்கு வழிகாட்டும் ஒளியாக அவர் தொடர்ந்து விளங்குகிறார்.
இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அரவிந்தரைக் கேட்கவும் படிக்கவும் வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் வங்காளம் வரையிலும், ஒரே கலாச்சாரம் நம் அனைவரையும் பிணைக்கிறது.
இந்திய கலாச்சாரத்தின் பண்டைய உணர்வுக்கு புதிய ஆற்றல், வேகம் மற்றும் திசையை அரவிந்தர் வழங்கினார்.
அரவிந்தரின் எண்ணங்களை இளைய தலைமுறையினரிடையே புகுத்தி, அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை அவர்களின் மனதில் ஏற்படுத்தாதவரை, அரவிந்தரின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது” இன்று அமித்ஷா குறிப்பிட்டார்.
“விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவின் பின்னணியில் மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன.
நமது சுதந்திரப் போராட்டம் தொடர்பான சிந்தனைகளுக்கு இளைய தலைமுறையினரிடையே புத்துயிர் ஊட்ட வேண்டும், கடந்த 75 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதலிடத்தில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்லும் இலக்கை அடையும் காலமாகும் என்ற எண்ணத்தைப் பரப்ப வேண்டும் என்பதே அவையாகும்.
சுயாட்சி என்ற கருத்தை அரவிந்தர் நாட்டிற்கு முன் வைத்தார், மேலும் உலகின் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி இந்தியாவுக்கு இருப்பதாக நம்பினார்.
சுயாட்சி என்பது அரசியல் அதிகாரத்தை மட்டும் குறிக்கவில்லை, சுயாட்சி என்பது இந்தியாவின் பூர்வீகக் கொள்கைகள், கலாச்சாரத்தின் கருத்துகள் மற்றும் அதன் சிறந்த மரபுகளை முன்னெடுத்துச் செல்வதையும் குறிக்கிறது.
அரவிந்தரின் எண்ணங்கள் நாட்டிற்கான விலைமதிப்பற்ற பாரம்பரியம் ஆகும். எந்த வெற்றியையும் எதிர்பார்க்காமல் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான யோசனையை அவர் நமக்கு வழங்கினார்.
அரசியல் நடவடிக்கையின் ஒரு முக்கியமான கோட்பாட்டை அரவிந்தர் முன்வைக்க முயன்றார், இது ஒரு வகையில் ஆன்மீக தேசியவாதம் என்றும் அழைக்கப்படலாம். தேசம் என்ற கருத்தை முதன்முறையாக அவர் முன்வைத்தார்”என்று குறிப்பிட்ட அமித் ஷா,
“அரவிந்தரின் கல்விக் கொள்கையில் உள்ள கருத்துகள், நரேந்திர மோடியின் புதிய கல்விக் கொள்கையை கவனமாகப் படித்தால் அதன் எல்லா இடங்களிலும் தெரியும். இந்தியாவை ஒருபோதும் சிறிய அளவில் நினைக்க முடியாது, இந்தியாவை ஒருபோதும் சிறிய அளவில் நினைக்கக்கூடாது, நாம் அடிமைகளாக இருந்த காலம் இருந்தது, ஆனால் நமது சிந்தனை மற்றும் பண்டைய கலாச்சாரம் ஒருபோதும் சிறிய அளவில் சிந்திக்க அனுமதிக்காது” என்று தனது உரையில் கூறினார் அமித் ஷா.
**வேந்தன்**