நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில், மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 24, மதிமுக 1, காங்கிரஸ் 7 என திமுக கூட்டணி 32 வார்டுகளை கைப்பற்றின. பாஜக 11, அதிமுக 7, சுயேச்சைகள் இரு இடங்களைக் கைப்பற்றின.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு திமுக சார்பில் நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் ஆர்.மகேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புத்தளம் கல்லடிவிளையை சேர்ந்த இவருக்கு வயது 57.
இந்நிலையில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக திமுக மேயர் வேட்பாளர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் வந்தனர். பின்னர், மாநகராட்சி ஆணையரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஆர்.மகேஷ். பாஜக சார்பில் மேயர் பதவிக்கு மீனா தேவ் போட்டியிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகளும் பாஜக வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்குகளும் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மேயர் பதவியை கைப்பற்றினார்.
**-பிரியா**