முதல்வரை ஸ்டாலின் அச்சுறுத்துகிறார்: டிஜிபியிடம் அதிமுக புகார்!

Published On:

| By Balaji

முதல்வர், வேலுமணி ஆகியோரை அச்சுறுத்தும் விதமாக பேசியதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் அளித்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி நடந்த மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகளை வீசவும், அதற்கு, ‘மேடம்… உங்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி அனுப்பி இங்கே வந்திருக்கிறீர்கள். வெளியே போங்க’ என்று உரக்கக் கூறினார். அவர் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டார்.

இதன் பிறகு பேசிய ஸ்டாலின், “மிஸ்டர் வேலுமணி அவர்களே… இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் என்ன… முதல்வரே எங்கும் நிகழ்ச்சி நடத்த இயலாத நிலை உருவாகிடும்” என்று எச்சரித்தார். இதுதொடர்பாக திமுகவின் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழக டிஜிபி திரிபாதியிடம் நேற்று (ஜனவரி 4) புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாபு முருகவேல், “மக்கள் கிராம சபை என்ற பெயரில் சட்ட விரோதமாகப் பொதுக்கூட்டம் நடத்தி வரும் ஸ்டாலின் முதல்வர், அமைச்சர் வேலுமணி ஆகியோரை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சட்டத்துக்குப் புறம்பான மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் இவ்வாறு கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் திமுகவினரைத் தூண்டிவிடும் வகையில் அவர் பேசியுள்ளார்” என்றார்.

வேலுமணியும் முதல்வரும், எங்கேயும் கூட்டம் நடத்த முடியாது என மிரட்டும் தொனியில் ஸ்டாலின் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “தொண்டாமுத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள் தான் இவர் என்று ஸ்டாலின் கற்பனையாக சித்திரித்தார். இதனால் திமுகவினர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தினர். எனவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபியுடம் மனு கொடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

*எழில்*�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share