நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று காலை 8 மணி முதல் நகர்புறத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றும், முன்னிலை வகித்தும் வருகிறது.
இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தன்னுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி முதல் வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆன்சி ஷோபா ராணி, காங்கிரஸ் வேட்பாளர் டென்னிஸ், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அமமுக வேட்பாளர் ஆனந்த ராஜன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் வேட்பாளர் ஆன்சி ஷோபா ராணி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
அதுபோன்று மக்கள் நீதி மய்யமும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. திருவாரூர் நகராட்சியின் 1வது வார்டில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
**விஜய் மக்கள் இயக்கம்**
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளை விட விஜய் மக்கள் இயக்கம் முன்னிலையில் உள்ளது. அந்தவகையில் தற்போதுவரை நான்கு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் பர்வேஷ், இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி 3வது வார்டில் மோகன்ராஜ், நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் வேல்முருகன், தேனி மாவட்டத்தில் அனுமந்தன்பட்டி பேரூராட்சி 14 வது வார்டில் வேல்மயில் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
**-வினிதா**