வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. வாக்கு எந்திரத்தில் பொருத்த சின்னத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு காலை 8 மணிக்கு முன்னதாகவும்,இரவு 8 மணிக்கு மேல் பரப்புரை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில், தற்போது பரப்புரைக்கான நேரம் நீட்டிக்கப்பட்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. மாதிரி நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று மேற்கண்ட நிகழ்வுகளை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆணையர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
பரப்புரையின்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிப்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
**பொதுவிடுமுறை**
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டுமென்றும், வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம், சம்பளக் குறைப்பு இருக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**