கடந்தாண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியினரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் தோசை சுட்டு, டீ போட்டு கொடுத்து, தெருவை பெருக்கி கொடுத்து, காலில் விழுந்தும் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன்படி திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முதலும், அதிமுக கடந்த 7ஆம் தேதி முதலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில், நாளை மறுநாள் முதல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடபடவுள்ளார்.
இதுகுறித்து பாமக இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான அன்பு மணி ராமதாஸ் நாளை மறுநாள் 13ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையிலும், பிப்ரவரி 14ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், பிப்ரவரி 15ஆம் தேதி சேலம் மாவட்டத்திலும் பிப்ரவரி 16ஆம் தேதி தருமபுரி மாவட்டத்திலும் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாட்கள் கடந்த நிலையில் அன்புமணி பிரச்சாரத்துக்கு வரவில்லையா என பாமகவினர் தங்களது மாவட்ட நிர்வாகிகளிடம் கேள்வியும் அதிருப்தியும் எழுப்பிவந்த நிலையில் பாமக தலைமையிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
**-வினிதா**