எழுவர் விடுதலை – ஆளுநரிடம் நேரில் வலியுறுத்துக: ராமதாஸ்

politics

எழுவர் விடுதலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றதும், ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் கடிதம் எழுதினார். [இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்புத் தெரிவித்தார்](https://minnambalam.com/2021/05/21/30).

இந்த சூழலில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ”ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகப் பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு   சிறப்புப் புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதை ஏற்றுப் பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர். ஆனால், ராஜிவ் கொலை குறித்த சில விளக்கங்களைப் பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற   அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி கொலை வழக்கில்  சேர்த்தனர். அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனும், மேலும் 6 தமிழர்களும் இன்று வரை 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது; பின்னர் அது ரத்து செய்யப்பட்டு பல்வேறு கால கட்டங்களில் வாழ்நாள் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது; பேரறிவாளன் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று அவரை விசாரித்த காவல் அதிகாரியும், தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியும் கூறியதெல்லாம் அனைவரும் அறிந்த வரலாறு.

பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த நிலையில், அதை மதித்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரை தீர்மானத்தை 09.09.2018-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான  அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்மீது 871 நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து விட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கோப்புகளை  ஆளுநர் அனுப்பி விட்டதாக 25.12.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை தெரிவித்ததில்  தான் இவ்வழக்கு முடங்கி விட்டது. அதை தகர்த்து எழுவரை விடுவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கடந்த மாதம் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த மே 20ஆம் நாள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். 7 தமிழர் விடுதலை விவகாரத்தை குடியரசுத் தலைவரின் முடிவுக்குக் கொண்டு செல்வது, அவர்களின் விடுதலையைத் தாமதப்படுத்தும் செயல் என்பது மட்டுமின்றி,  மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்ப்பதற்கு ஒப்பான செயலாகும். 7 தமிழர்களை  விடுதலை செய்யும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தமிழ்நாட்டு ஆளுநருக்கு உண்டு என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 07.09.2018 அன்று உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்து விட்ட நிலையில், நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையின் கதவுகளைத் தானே தவிர, டெல்லி குடியரசு மாளிகையின் கதவுகளை அல்ல.

எனவே, 7 தமிழர்கள் விடுதலை குறித்துக் கடந்த 09.09.2018 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும்; நேரிலும் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடுவதற்கு மனித உரிமைகளில் அக்கறை கொண்ட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *