தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதே மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்ததற்கு அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கொரோனா விவகாரத்தில் பிரதமருக்கே பல அறிவுரைகள் வழங்கிய முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணியும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பாமக வழக்கறிஞர் கே.பாலுவின் மனுவும் ஒன்று. அந்த வழக்கில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஏற்கனவே மனு செய்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்ற பெஞ்ச்சில் மனு செய்தனர். அந்த மனுவோடு மக்கள் நீதியமய்ய அமைப்புச் செயலாளர் மௌரியா, ராஜேஷ் உள்ளிட்டோரும் மனு செய்தனர். இந்த வழக்கில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க மே 8 ஆம் தேதி தடை விதித்தது உயர் நீதிமன்ற பெஞ்ச்.
இந்தத் தீர்ப்பை வரவேற்று பல தலைவர்களும் கருத்து தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸோ, அன்புமணியோ அறிக்கையோ கருத்தோ எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று (மே 9) தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்த நிலையில், பாமக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
பாமக வழக்கறிஞர் பாலு, “டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை எதிர்த்து கேவியட் மனு இன்று தாக்கல் செய்துள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேவியட் என்றால் தமிழக அரசின் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது, பாலுவின் பதிலையும் கேட்டே முடிவெடுக்க வேண்டும் என்று கோரும் மனுவாகும்.
தீர்ப்புக்குப் பிறகு ராமதாஸும் அன்புமணியும் அமைதி காத்த நிலையில், திடீர் மூவ் ஆக பாமக தரப்பு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது அதிமுக அரசை மேலும் அதிரவைத்திருக்கிறது.
**-வேந்தன்**�,