புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், 2020-21ஆம் கல்வியாண்டு ப்ளஸ் 2 தேர்வு குறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம் என்று தெரிவித்தார்.
கொரோனா இரண்டாம் அலை எதிரொலியாகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி (இன்று) புதிய கல்வி ஆண்டு தொடங்கும்.
இந்தச் சூழலில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடைபெறும் என்று கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக திருச்சியில் நேற்று (மே 31) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து துறையினருக்குமே நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் குறிப்பிட்ட காலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
வைரஸ் தொற்று பரவல் எந்த அளவுக்கு விரைவாகக் குறைகிறதோ அதற்கேற்ப விரைவாக பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இவ்விவகாரத்தில் கொள்கை ரீதியான முடிவை இரண்டு நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
**-பிரியா**
�,”