இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார்.
நடிகர் தனுஷூடனான விவாகரத்து அறிவிப்புக்கு பின்பு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைதளங்களில் இவ்வளவு நாட்களாக ‘ஐஸ்வர்யா தனுஷ்’ என வைத்திருந்த தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில்
“18 வருடங்களாக நண்பர்களாக, கணவன் மனைவியாக இருந்தோம். இருவரின் வளர்ச்சியிலும் ஒருவருக்கொருவர் இருந்துள்ளோம். இனி நாங்கள் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிகிறோம். எங்களின் முடிவுக்கு மதிப்பளித்த அனைவருக்கும் நன்றி” என அந்த பதிவில் இருவருமே தெரிவித்து இருந்தார்கள்.
இதன் பிறகு, இருவருக்குள்ளும் சமாதான முயற்சி மேற்கொள்வதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா இயக்கிய ‘பயணி’ என்ற மியூசிக்கல் ஆல்பம் வெளியானது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்பு இயக்குநராக திரும்பிய ஐஸ்வர்யாவுக்கு ‘வாழ்த்துகள் தோழி’ என தனுஷ் ட்வீட் செய்ய அதற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்து பதில் கூறியிருந்தார்.
திருமணத்திற்கு பின்பு ஐஸ்வர்யா தனது சமூக வலைதளங்களில் ‘ஐஷ்வர்யா தனுஷ்’ என பெயர் மாற்றி இருந்தார். ஆனால், இருவரது விவாகரத்து அறிவிப்புக்கு பின்பு அவர் பெயர் மாற்றாமல் இருந்ததால் ரசிகர்கள் இவர்கள் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் ‘ஐஸ்வர்யா தனுஷ்’ என்றிருந்த பெயரை தற்போது ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ என்றே மாற்றியுள்ளார்.
அதே போல, சமந்தாவும் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே நாக சைதன்யாவை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து பின் தொடர்வதில் இருந்து நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**