அப்பா – மகள் பாசத்தைப் பேசும் சித்திரைச் செவ்வானம்!

entertainment

சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குநர் விஜய்யின் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற திரைப்படம் பிரத்யேகமாக ஜீ-5, ஓடிடி தளத்தில் டிசம்பர் 3ஆம் தேதியன்று வெளியாகிறது.

லாக்கப், க.பெ.ரணசிங்கம், மதில், ஒரு பக்க கதை, மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம் உள்ளிட்ட படங்களை ஜீ-5 ஓடிடி தளம் வெளியிட்டது. இந்த வரிசையில் தற்போது தனது அடுத்த படத்தையும் ஜீ-5 ஓடிடி தளம் அறிவித்துள்ளது.

‘சித்திரைச் செவ்வானம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை.

இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராகவும், பிரவீன் கே.எல். படத் தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் பணி புரிந்துள்ளனர்.

இயக்குநர் விஜய், இந்தப் படத்தை எழுதி வெளியிடுகிறார். ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்த சித்திரைச் செவ்வானம் ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

ஒரு அப்பா, பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுபூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சினைகள்தான் கதை. இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார்.

படத்தின் இயக்குநரான ஸ்டண்ட் சில்வா, இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக் கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்தக் கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம்.

பின்னர் சமுத்திரக்கனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷீட்டிங் போகலாம்..?’ என்று கேட்டார். அப்படி உருவானதுதான் இந்த ‘சித்திரைச் செவ்வானம்’ திரைப்படம்.

நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்‌ஷன் படம் என்று நினைத்துவிடாதீர்கள், நெஞ்சை தொடுவது போன்ற உணர்வுபூர்வமான படம்தான் இது. ஓர் அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவுதான் கதை. சமூகத்தில் ஏற்படக் கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பதுதான் கதை.

இந்தப் படத்தின் முக்கியமான மகள் கதாபாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் விஜய் கூறினார். எங்களுக்கும் அவர் அந்த கதாபாத்திரத்தில் சரியாக பொருந்துவார் என தோன்றியது. மிக அற்புதமாக மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தை, கேரளாவில் புகழ்பெற்ற நடிகையான ரீமா கல்லிங்கால் செய்திருக்கிறார். நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறோம். நினைத்ததைவிட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது.

ஜீ-5 தளத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய படமாக இந்தப் படம் இருக்கும். அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

நடிகை ரீமா கல்லிங்கால் பேசும்போது, “முதலில் மாஸ்டர் சில்வாவும், இயக்குநர் விஜய்யும், ‘சித்திரைச் செவ்வானம்’ படத்திற்காக என்னை அணுகி, போலீஸ் பாத்திரம் என்று சொன்னபோது, நானும் இதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்று தான் நினைத்தேன்.

ஆனால், அப்பா மகளுக்கான ஆழமான உணர்வை சொல்லும் கதையை சொல்லி, என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் மாஸ்டர். தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவதை காண பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குநராக தன் திரைப்பயணத்தை தொடங்கும் ஸ்டண்ட் சில்வா சாருக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும், எதிர்காலத்தில் அவர் மிகப் பெரிய இயக்குநராக வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான விஜய்பேசும்போது, “எனக்கு 2014ஆம் ஆண்டு தோன்றிய ஒரு சிறு ஐடியாவை ஒரு கதையாக எழுதி வைத்திருந்தேன். 2020 பொது முடக்க காலத்தில் நானும் சில்வா மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தக் கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “நீங்களே இயக்குங்கள்” என்று சொன்னேன். ஒரு ஆக்‌ஷன் இயக்குநர் என்றால் ஆக்‌ஷனில் மட்டும்தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அனைவரும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால், சில்வா மாஸ்டர் மிகவும் எமோஷலானவர். அவருக்குள் ஒரு மென்மையான பக்கம் இருக்கிறது. மிகவும் எளிய சுபாவம் கொண்டவர். நிறைய பேருக்கு உதவுபவர். அவர் இந்தக் கதையை மிகச் சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இந்தப் படத்தை அவரை இயக்கச் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

அவருடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தது எனது கடமையாகத்தான் நினைக்கிறேன். சில்வா மாஸ்டர் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். படம் உருவானதற்கு முழு காரணம் அவர்தான்.

அடுத்ததாக சமுத்திரக்கனி சார். அவர்தான் இந்தப் படத்தின் உயிர். நாங்கள் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு, தன்னுடைய சொந்தப் படம் போல் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். முக்கியமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் நடித்திருக்கிறார். ஒரு பிரபலத்தின் தங்கை என்றில்லாமல், நடிப்புக்காக தனியே பயிற்சி எடுத்துகொண்டு நடிக்க வந்திருக்கிறார். மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

அதே போல் நாங்கள் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு ரீமா கல்லிங்கால் மிக முக்கியமான பாத்திரத்தை செய்துள்ளார். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை வெளியிடும் ஜீ-5 நிறுவனத்துக்கு மிகப் பெரும் நன்றி” என்றார்.

**-அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *