உஷா பாரதி
*ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்*
*அடுப்படி வரைதானே – ஒரு*
*ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்*
*அடங்குதல் முறைதானே*
*கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே*
*கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்*
** இந்தப்பாடல் எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண் மலர் போன்ற மென்மையுணர்வுடன்தான் எப்போதுமே இருக்கவேண்டும் என்று எந்தவொரு வரையறையும் இல்லை. எப்போதுமே மலர், பூ, வாசம், நேசம்னு பெண்களை அதுவும் காதல் வயப்படும்போது மட்டும் புகழாரம் பாடுவது… ** அதுல அந்த ஆண்மகன் நினைத்த மாதிரி அந்தப் பெண் இல்லைன்னா, அதுவே ஒரு ஆகப்பெரிய ஏமாற்றமாக நினைப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
பாடலுக்குள் செல்வதற்கு முன்பு இந்தப் படத்தின் பெண் கதாபாத்திரங்கள் நமக்கு சொல்லும் சேதி என்ன?
நிழல் நிஜமாகிறது. தன்னைச் சுற்றியுள்ள சமூகம் ஏமாற்றுகின்ற ஒரு சமூகமாகவே இருப்பதாக ஒரு பெண் உணரும் வேளையில் தனக்குள் எவ்வாறெல்லாம் அவள் இறுகிப் போகிறாள் என்பதை உணர்த்தும் நாயகி கதாபாத்திரம் இந்துமதி.
நாயகி தவிர்த்து நம் மனத்தில் எப்போதும் நிற்கும் திலகம் (ஷோபா). எல்லாப் பெண்களுக்கும் ஒரு ராஜகுமாரன்தான் தனக்கானவனாக இருக்க முடியும் என்பதை மனத்தில் நிறுத்தும் இளமைப் பருவம். வாழ்க்கையின் யதார்த்தத்தில் அது சாத்தியமில்லை என்றாலும் அதை மட்டுமே தேடும் மனது. **அப்படி ராஜகுமாரன் என்று நினைத்த ஒருவனுடன் ஒன்றிணைந்ததால் அவனது வாரிசை சுமக்கும் வேளையில் அவனால் புறக்கணிக்கப்படுகிறாள். அவள் தனது நிஜம் உணரும் நேரத்தில், அவளது நிலையுணர்ந்து அவளை அவளுக்காகவே ஏற்றுக்கொள்ளும் ஒருவனை கைப்பிடிக்கிறாள்.**
படத்தின் இரண்டு பெண் கதாபாத்திரங்களும் நமக்குள் நிறைய கேள்வியை எழுப்புகிறவர்களாகவே அமைந்துள்ளனர். **
வாழ்வின் ஏமாற்றங்களை மட்டுமே பார்த்து வாழும் ஒரு பெண் தனக்கான மிகுதியான எச்சரிக்கை உணர்வினால், ஒரு முகமூடிக்குள் புதைந்து கொள்ள, அவளது அதீத எச்சரிக்கை உணர்வின் மிகுதியில் அவளின் பேச்சு, நடத்தை அனைத்துமே கற்பாறையை விடவும் இறுகித்தான் போகிறது. அதனைப் பார்க்கும் அனைவரின் பார்வையிலும் அவள் ஒரு திமிர்பிடித்த பெண்ணாகவே தெரிகிறாள்.
**
பொதுவான ஒரு பெண்ணின் இயல்பு என்ற கற்பிதங்களிலிருந்து மாறுபட்ட இந்த நாயகியை பெண்களே பார்த்து குழம்பித்தான் போகின்றனர். ஆனால், உண்மையில் சூடுகண்ட பூனை அல்லது அதனை உணர்ந்த பூனையின் மனநிலையை ஒத்ததே நாயகியின் மனநிலை என்பதை பலரும் காணத் தவறிவிடுகிறோம். நிற்க.
குறிப்பாக, இந்தப் பாட்டில் மீண்டும் மீண்டும் என்னை யோசிக்க வைத்த வரிகள் –“ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்; அடுப்படி வரைதானே – ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே“ – எனது பார்வையில் படுமுட்டாள்தனமாக எனக்குத் தோன்றிய வரிகள் இவை. ஒரு பெண்ணின் கோபத்தை வெறும் அடுப்பங்கரைக்குள் சுருக்கிப் பார்ப்பதும், ஒரு ஆண் காமம் உட்பட எதற்காக அவளைத் தேடி வந்தாலும் அதில் அடங்குதல் தான் முறையானது என்பதும் ஆணாதிக்கத்தின் உச்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
காதலோ, நட்போ, வேறு எந்த வகையான ஆண் – பெண் உறவிலும் கொடுத்தலும், பெறுதலும் என்பதுதான் சரியாக இருக்க முடியும். இணைந்து பயணித்தல், இயைந்து ஒன்றிணைதல் என்பதுதான் பரஸ்பரம் இருவருக்குமானதாக இருக்க முடியும். இருவருக்குமான வாழ்க்கைத் தேடலும் அப்போதுதான் நிறைவு பெறும்.
காமத்திலும் இருவரும் இணைதல், கேட்டுப் பெறுதல், கேட்காமலே குறிப்பறிந்து கொடுத்தல் என இருவருக்குமானதாக அந்தக் காமம் மாறும்போதுதான் அது முழுமையடையும்.
இந்தப் பாடலை கேட்கும்போது, பாடலின் இசை, காட்சிப்படுத்துதல் என அனைத்தும் நமக்கு நெருக்கமாக இருந்தாலும்…
**
அதீத எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தும் பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆணுக்கான ஏமாற்ற மனநிலையாக சித்தரித்து, ஒரு பெண்ணை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுதல் சரியா? அப்படிப்பட்ட பாடல்வரிகளை பெண்ணின் மனநிலையிலிருந்து சிந்திக்கும் ஒருவரால் எழுதியிருக்க முடியுமா? என்ற ஒரு கேள்வியும் என் மனதில் எழாமலில்லை.
**
**பாடலில் என்னை யோசிக்க வைத்த சில வரிகள்**
*கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே*
*கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்*
*அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ*
*அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ*
*வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு*
*வரிசையை நான் கண்டேன்….*
*நானும் ஏமாந்தேன்*
*ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்*
*அடுப்படி வரைதானே – ஒரு*
*ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்*
*அடங்குதல் முறைதானே*
**
கட்டுரையாளர் குறிப்பு
**
**
உஷா பாரதி
**
ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.
[பாடலதிகாரம் 1 – அவள் அப்படித்தான்… உடலரசியல்!](https://www.minnambalam.com/public/2020/09/13/9/padaladhikaram-1-)
**மீண்டும் ஞாயிறு அன்று சந்திப்போம்….**�,”