தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது 35வது பிறந்தநாள் நேற்று. இதற்காக ரசிகர்களும் திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். இதனால், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSam என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளையும் அதற்கு சமந்தா கொடுத்த பதிலையும் இங்கு பார்க்கலாம்.
**ரசிகர்: ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் உங்களுடைய கதிஜா கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி?**
சமந்தா: ”மக்களை மகிழ்விக்கும் வகையிலான அந்த படத்தின் கதையில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். பெரிதாக யோசிக்காமல், எதை பற்றியும் ஆராயாமல் உங்களது வழக்கமான ஒரு நாளின் பிரச்சனைகளில் இருந்து பிரேக் எடுத்து சிரித்து சந்தோஷமாக இருக்க கதிஜாவையும் படத்தையும் பாருங்கள்”.
**ரசிகர்: நயன்தாரா குறித்து சில வார்த்தைகள்?**
சமந்தா: ”நயன்தாரா எப்பொழுதும் நயன்தாரா தான். அவரை போல வேறு யாருமே கிடையாது. அவரது உண்மை, நேர்மை மற்றும் கடுமையாக உழைக்க கூடிய ஒருவர். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி”.
**ரசிகர்: நீங்கள் சென்னையில் இருந்து ‘கதிஜா’வுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்காமல் போய் விட்டீர்கள். சீக்கிரம் காஷ்மீரில் இருந்து (படப்பிடிப்பிற்காக அங்கு இருக்கிறார்) சென்னைக்கு வந்து பாருங்கள்!**
சமந்தா: ”கதிஜா கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பிற்கு எப்போதும் என்னுடைய நன்றி. அதை நான் அறிவேன். இந்த வரவேற்பை தான் நான் என்னுடைய சிறந்த பிறந்தநாள் பரிசாக பார்க்கிறேன்”.
**ரசிகர்: உங்களுக்காக அனிருத் இசையமைப்பதை கேட்கும் போது எப்படி இருக்கும்?**
சமந்தா: ”அவர் எப்பொழுதுமே ஸ்பெஷல்! ஜீனியஸ்!! ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அவர் இசையில் ‘டிப்பம் டப்பம்’ பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதை விக்னேஷ் சிவனும் அழகாக எழுதி இருப்பார்”.
**ரசிகர்: ஒரே சமயத்தில் சமமாக அன்பையும் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?**
சமந்தா: ”அது அன்பாக இருந்தாலும் சரி, வெறுப்பாக இருந்தாலும் சரி இது எதற்குள்ளும் நான் உள்ளே போக விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விலகி இருக்கவே முயற்சி செய்கிறேன்”
**ஆதிரா**