நடிகை பாவனா ஐந்து வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தன்னுடைய கம்பேக் மலையாளத் திரைப்படத்தை அறிவித்திருந்தார். அதற்கு அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் கேரளாவில் தொடங்கியிருக்கும் 26வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு நடிகை பாவனா முன் அறிவிப்பு இன்றி வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கேரளா சர்வதேசத் திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது. 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானார், அதுசம்பந்தமான வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்குபின், மலையாளப் படங்களில் நடிக்காததுடன்,பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் பாவனா தவிர்த்து வந்தார்.
இந்த சூழ்நிலைகளை எல்லாம் கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, ‘Ntikkakkakkoru Premondarnn’ என்ற படத்தில் பாவனா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மலையாளத்தில் அவர் கடைசியாக ‘Adam Joan’ என்ற படத்தில் நடித்தார். அது 2017ஆண்டில் வெளிவந்தது.
இந்த நிலையில், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு பாவனா வருவது நிகழ்ச்சிநிரல் பட்டியலில் வெளியிடப்படாத நிலையில், அவர் திடீர் என விழா மேடைக்கு வருகை தந்தார். விளக்கு ஏற்றும் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது, கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் “கேரளாவின் ரோல் மாடல் நீங்கள்தான் பாவனா” எனப் பாராட்டிப் பேசினார்.
**அம்பலவாணன்**