‘ராதே ஷ்யாம்’ படத்தின் தோல்வி குறித்து, அதன் நாயகியான பூஜா மனம் திறந்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி கதாநாயகனான பிரபாஸ், பூஜா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் இந்த மாதம் 11ஆம் தேதி ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. மிக பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டது.
காலத்துக்கும் காதலுக்கும் இடையில் பூஜா, பிரபாஸின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஆனால், படத்திற்கு எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், “ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விதி இருக்கும். அது போலதான் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படமும். அதையும் தாண்டி என்னுடைய நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
சில படங்கள் நன்றாக இருக்கும். ஆனால் வசூலில் சோபிக்காது. சில படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் நன்றாக இருக்கும். ஆனால், நன்றாக ஓடி இருக்காது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு விதி இருக்கும். ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கும் அது போலதான் நடந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் ராம் சரண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் பூஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிகர் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**