இசையமைப்பாளர் இளையராஜா தனது இசையில் வெளியான பாடல்களுக்கான காப்புரிமை, ராயல்டி சம்பந்தமாக சட்டபூர்வ நடவடிக்கைகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றார்.
அதன் ஒரு பகுதியாக ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
உரிய காப்புரிமை பெறாமல் பயன்படுத்துவது ஒளிப்பதிவு சட்டப்படி தவறு என்றும், பதிப்புரிமை என்பது எந்தவொரு மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான பிரத்யேக உரிமை எனவும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், எகோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
**-இராமானுஜம்**