இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஃப்ரெஷர்கள் (படிப்பை முடித்துவிட்டுப் புதிதாக வேலை தேடுபவர்கள்) பணியமர்த்தப்படுவது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 15 விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நவ்கரி.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திறமைசாலிகள் பணியமர்த்தப்படுவதின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் நிலையாக அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் பொறியியல் துறைகளால், நாட்டில் ஒட்டுமொத்த பணியமர்த்தும் செயல்பாடுகள் 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஊழியர்களைப் பணியமர்த்துதலில் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களும் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆட்டோமொபைல் துறையிலும் அதுசார்ந்த துறைகளிலும் பணியமர்த்துதல் 31 விழுக்காடு அதிகரித்துள்ளது. கட்டுமானம், பொறியியல் துறைகளில் பணியமர்த்துதல் செயல்பாடுகள் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. பணியமர்த்துதல் செயல்பாடுகள் தொலைத் தொடர்புத் துறையில் 25 விழுக்காடும், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தித் துறையில் 21 விழுக்காடும் உயர்ந்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், ’2017 மே மாதத்தைக் காட்டிலும் 2018 மே மாதத்தில், தொழில் துறைத் தயாரிப்புகள், கனரக இயந்திரங்கள் உற்பத்தி, மருந்து உற்பத்தி, பிபிஓ போன்ற துறைகளில் பணியமர்த்தும் செயல்பாடுகள் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது (ஒவ்வொரு துறையும் 18 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது). எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் துறை 11 விழுக்காடு வளர்ச்சியையும், மென்பொருள் துறை 2 விழுக்காடு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.�,