‘நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்’ என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிச் சான்றிதழை வாங்கிய பிறகு தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனனைத் தோற்கடித்து தினகரன் வெற்றி பெற்றார். நேற்று (டிசம்பர் 24) மாலை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர், தினகரனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
பின்னர் ராணிமேரிக் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “ஆர்.கே.நகரில் எனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை வழங்கிய ஆர்.கே.நகர் தொகுதி மக்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற வைத்தனர். தொகுதியில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளைச் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வேன்.
ஆளுங்கட்சியின் வெற்றிக்காகத் தேர்தல் ஆணையம், காவல் துறை இரண்டும் கடுமையாக வேலை செய்தன. இருப்பினும் தோல்வியைத் தழுவினர். என்னை தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்ப்பார்த்தேன். ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார். ஆளுங்கட்சி என்பதால் டெபாசிட் மட்டும் வாங்கியுள்ளனர். தொகுதியில் நான் பணப் பட்டுவாடா செய்யவில்லை. ஆனால், பணப்பட்டுவாடா செய்ததால்தான் ஆளுங்கட்சியினர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர். காவல் துறையின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியதாக உள்ளது. காவல் துறை ஏவல் துறையாக செயல்படக் கூடாது” என்று கூறிய அவர்,
“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். அந்த அணியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இனி எங்கள் பக்கம் வருவர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள். கட்சி குறித்து முடிவுகளை நான் தனிப்பட்ட முறையில் எடுக்க மாட்டேன். பொதுச்செயலாளர் அனுமதியோடு அனைத்தும் செயல்படுத்தப்படும். தேர்தல் வெற்றிக்காக சசிகலாவைச் சந்தித்து ஆசி பெறுவேன். ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ வெளியான விவகாரத்தால் நான் வெற்றி பெறவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.�,