தூத்துக்குடியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
இந்தியாவிலுள்ள மொத்த காற்றாலை மின் உற்பத்தியில், 40 சதவிகிதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்தான் காற்றாலை மின் உற்பத்தி அதிகம். 2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் தகவலின்படி, 6,163 காற்றாலைகள் உள்ளன. இவை மூலம் அதிகளவாக 3,835 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் காற்றாலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் லாபம் ஈட்டி வருகின்றன.
இந்த நிலையில், வடகரை கிராமத்தில் புறம்போக்கு மற்றும் பட்டா விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலைகளை அமைக்கிறது. அந்நிறுவனம், விதிமுறைகளை மீறி நீர் நிலைகளிலும், விவசாய நிலங்களிலும் காற்றாலைகள் அமைக்கப்படுவதாகவும், அவ்வாறு அமைப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும் அருமைராஜ் என்பவர் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை நேற்று (ஆகஸ்ட் 23) விசாரித்த மதுரைக் கிளை, நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்க இடைக் கால தடை விதித்தது. மேலும், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.�,