தீபாவளி சமயத்தில் சுமார் ரூ.50,000 கோடி ரொக்கப் பணம் வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீபாவளி வாரத்தில் ரூ.49,418 கோடிப் பணம் வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 9ஆம் தேதி புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு ரூ.20.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்திற்கு பிறகு புழக்கத்தில் அதிகரித்த அதிக பண மதிப்புகளில் ஒன்றாகும். இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில், புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு ரூ.52,786 கோடி அதிகரித்திருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. பணப் புழக்கத்தைச் சீராக்க அப்போது வங்கிகள் கூடுதல் நேரம் செயல்பட்டன.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பணப் புழக்க வளர்ச்சியானது தொடர்ந்து 53 வாரங்களாக வீழ்ச்சியே கண்டு வந்தது. அதிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் பணப்புழக்கம் மீண்டும் 18 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. ரூபாய் தாள்களுக்கான தேவையும் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி ஒவ்வொரு மாதமும் 2.6 லட்சம் கோடி ரூபாயை ஏடிஎம்களில் மக்கள் எடுக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி பணப்புழக்கம் அதிகரித்ததாகக் கருதினாலும், பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் எனத் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதும் பணப்புழக்கம் அதிகரித்து வருவதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறுகையில், “தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் அதிகரிப்பது வழக்கமானதே. அதற்கான காரணம் என்னவென்பதை நீங்கள் யூகிக்க இயலும். நாங்களும் யூகிக்கிறோம்” என்றார்.�,