�
உணவுப் பொருட்கள் விலை கடந்த ஜூன் மற்றும் மே மாதங்களில் பெரும்பாலும் குறைந்திருந்தது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் விலை அடக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 1.54 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாகத் தக்காளி, உருளைக் கிழங்கு, பருப்புகள் உள்ளிட்டவை 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளன. தற்போது பருவமழைக் காலம் துவங்கியுள்ளது. இந்த மாதத்திலிருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. தக்காளி விலை இந்த மாதத்தில் மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, தக்காளி விலை கடந்த மே மாதத்தில் 31.6 சதவிகிதம் சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் 40.8 சதவிகிதம் சரிந்துள்ளது. ஆனால் ஜூலை மாதத்தில் இந்தியா முழுவதும் எல்லாக் காய்கறிகளின் விலையும் தோராயமாக 14 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்குத் தோராயமாக ரூ.46ஆக உள்ளது. இது கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.40ஆக இருந்தது.
இந்த விலைகள் ஒவ்வொரு நகரத்திற்கும் மாறுபடும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்லியில் தக்காளி விலை 25 சதவிகிதம் கூடுதலாக இருந்தது. கிலோ ஒன்றுக்கு ரூ.70க்கும் அதிகமாக இருந்தது. கடந்த பருவத்தில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டதாலும் அவற்றின் விலை குறைந்திருந்தது. கடந்த இரண்டு மாதங்களாகக் குறைந்திருந்த காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது என்பது நுகர்வோரை, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.�,