உள்நாட்டுப் பிரச்னை, வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடைமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எந்தவித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்தனர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கனைச் சேர்ந்த 15 வயது சிறுவன் 25 ரூபாய் சம்பளம் கேட்டதற்காக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (மே 14) கராச்சி நகரில் உள்ள கரிமாபாத் பகுதியில் மாடிப்படிகளை துடைத்ததற்காக அடுக்குமாடி உரிமையாளரிடம் 25 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கேட்ட அகதி சிறுவனை ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இதுகுறித்து அஜிஸாபாத் காவல் நிலைய அதிகாரி ஜமால் லெகரி, “கொலை செய்யப்பட்ட சிறுவன் நூர் அகா (15) ஆப்கனைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். இவர்கள் சோஹராப் கோத் மச்சார் காலனியில் வசித்து வருகின்றனர். கரிமாபத்தில் உள்ள வீடுகளிலிருந்து குப்பையை அகற்றி அதற்கு ஒரு ரூபாயை சம்பளமாகப் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டு உரிமையாளர் அயாஸ் மாலிக்கிடம் மாடிப்படிகளை துடைத்து சுத்தப்படுத்தியதற்காக சிறுவன் சம்பளம் கேட்டுள்ளான். இதனால், அவர் சிறுவனை சுட்டுக் கொன்றுள்ளார். தப்பியோட முயற்சி செய்த அவரை தற்போது கைது செய்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பாகிஸ்தானில் 3,000 ரூபாய் சம்பளம் கேட்ட 13 வயது சிறுவனின் வலது கையை வீட்டு உரிமையாளர் துண்டித்துள்ளார்.�,