இயக்குநர் கிருஷ்ணா, தனது அடுத்த படத்தை தெலுங்கில் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜில்லுனு ஒரு காதல். சுமார் பத்து வருடத்துக்கு முன்பு இந்தப்படத்தின் பாடலையும் வசனத்தையும் ரிங் டோனாக வைக்காத தமிழக யூத்துகளையே பார்க்கமுடியாது எனலாம். ஏன் இன்றும் முன்பே வா என் அன்பே வா எனும் அந்தப்பாடலை முணுமுணுக்கும் இளசுகளைப் பார்க்க முடியும்.
அந்தளவிற்கு அந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த திருமணத்துக்குப் பிந்தைய காதலின் உறவுநிலைகளும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. சூர்யா-ஜோதிகா- பூமிகா காம்பினேஷனில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்து பெரும் வெற்றியை அப்படம் பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார் இயக்குநர் கிருஷ்ணா. வெற்றிப்படம் கொடுத்தபோதும் அவர் தொடர்ந்து படங்களை இயக்கவில்லை.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பின்னர் நெடுஞ்சாலை என்னும் ஒரு படத்தை இயக்கினார். ஆரி நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின்னர் மீண்டும் ஆரி நடிப்பில் ‘மானே தேனே பேயே’ என்னும் படத்தில் இணைந்தார் கிருஷ்ணா. ஆரியுடன், சுபஸ்ரீ கங்குலி, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பதாகச் சொன்ன இந்தப்படம் வெகுநாள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘ஆர்.எக்ஸ்-100’ படம் வாயிலாக டாக் ஆப் தி டவுனாக இருந்துவரும் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் கிருஷ்ணா. வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இதைத் தயாரிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. தெலுங்கில் மட்டுமே தற்போது உருவாகிறது எனக்கூறப்பட்டிருக்கும் நிலையில் தமிழிலும் இந்தப் படம் வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது.�,