தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர வேண்டுமானால் பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம். வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். மொத்த, கட்-ஆஃப் 200ஆக நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். இதில் கணிதத்தில் பெறும் மதிப்பெண்ணில் 50 சதவிகிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் பெறும் மதிப்பெண்களில் தலா 25 சதவிகிதம் என்ற அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன்படி இதுவரை பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் என்றிருந்த நிலையில் தற்போது அது கட்டாயமில்லை என்று ஏஐசிடிஇ கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வேதியியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்குத் தடையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல் பாடத்தையும் கட்டாயமாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இன்று (பிப்ரவரி 28) அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏஐசிடிஇ-யின் இந்த அறிவிப்பு, மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேல் நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பாடம் எடுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலைவாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்து இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பத்தாம் வகுப்புத் தேர்வில், 500க்கு 400க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே, ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்குத் தகுதி பெற்று, அதன்வழியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய தொழில் நுட்பங்களைக் கண்டு அறிய முடியும்.வேளாண்மைப் பொறியியல், கட்டுமானம், வேதியியல் மற்றும் பல தொழில்நுட்பக் கல்விக்கு, மேல் நிலை வகுப்பில், வேதியியல் படித்து இருக்க வேண்டும்.
ஆனால், புதிய அறிவிப்பின்படி, மாணவர்கள், வேதியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்து எடுப்பது கட்டாயம் அல்ல என்ற நிலை ஏற்படுகிறது. இது, வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெருந்தடையாக அமைந்து விடும். அதன்பிறகு, வேதியியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள, வேற்று நாட்டு அறிஞர்களின் உதவியைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
”துணித்தொழில், வண்ணப் பூச்சுகள், பிளாஸ்டிக், உரங்கள், வேளாண்மை, தோல் பதனிடும் தொழில், சாயம் ஏற்றுதல், மருந்துகள், பெட்ரோல், மின் தகடுகள், சிமெண்ட், உணவு பதப்படுத்துதல், மண்ணியல் ஆய்வுகள், தரக் கட்டுப்பாடு ஆகிய முதன்மையான துறைகளில், வேதியியல் தொழில்நுட்ப அறிஞர்களின் பணி கட்டாயத் தேவை ஆகும்.
இன்று வேதியியல் அறிவு, அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் தேவையாக இருக்கின்றது. அறிவியல் தொடர்பான எந்தக் கல்விக்கும், தனித்திறன் கொண்ட வேதியியல் அறிஞர்கள் தேவை.
பொறியியல் பட்டதாரிகளைக் காட்டிலும், ஒரு வேதியியல் பட்டதாரி, இன்று எந்தத் துறையிலும் வேலைவாய்ப்புகளை மிக எளிதாகப் பெற முடியும். இந்நிலையில், வேதியியல் கட்டாயப் பாடம் அல்ல என்றால், திறன் குறைந்த மாணவர்கள், வேதியியல் தொடர்பு இல்லாத ஏதேனும் ஒரு பணிக்குள் தங்களை முடக்கிக் கொண்டு விடுவார்கள்.
வேதியியல் கட்டாயப் பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், பி.எஸ்சி வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.எனவே, ஏஐசிடிஇ இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வைகோ.
**கவிபிரியா**�,