2017ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி அளவு 28.81 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு ஆண்டில் மொத்தம் 11.94 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை நீலகிரியைச் சேர்ந்த தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்திருந்தன. இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் 28.81 சதவிகித உயர்வுடன் மொத்தம் 15.38 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி அளவானது ஐந்தாண்டு சராசரியை விட 9.62 சதவிகிதம் அதிகமாகும். அதாவது, முந்தைய ஐந்து ஆண்டுகளுக்கான உற்பத்தி அடிப்படையில் 2017ஆம் ஆண்டில் 14.03 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை மட்டுமே உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்ததாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பருவநிலை தேயிலை உற்பத்திக்கு உகந்ததாக இல்லாததால் 8.6 லட்சம் கிலோ தேயிலை மட்டுமே உற்பத்தியானது. ஆனால் 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 9.5 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. எனினும், ஒட்டுமொத்த ஆண்டுக்கான உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 2018ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்திக்கான தொடக்கம் சரியாக அமையவில்லை. யுனைட்டட் நீலகிரி தேயிலை எஸ்டேட் கோ லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் டி ஹெக்டே இதுபற்றி பிசினஸ்லைன் ஊடகத்திடம் கூறுகையில், “நீலகிரியில் தற்போது கடும் பனி நிலவுகிறது. குறிப்பாக கொரகுண்டா பகுதியில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கும் கீழே (-6) சென்றுள்ளது. எங்களது நிறுவனத்துக்குச் சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது” என்று கவலை தெரிவித்தார்.�,